ஈரோட்டில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு, டீச்சர்ஸ் காலனி, அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன், 30; கொசு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி. கடந்த, 2013ல் தீபரஞ்சனி, 24, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபரஞ்சனி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காப்பீடு திட்ட முகவராக பணியாற்றினார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தீபரஞ்சனியின் நடத்தையில் விவேகானந்தன் சந்தேகப்பட்டு வந்ததால், கணவன்-, மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த, 2018 ஏப்., 22ல், மீண்டும் தகராறு ஏற்பட்டு, விவேகானந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபரஞ்சனியின் உடலில் சரமாரியாக குத்தினார். இதில், தீபரஞ்சனி இறந்தார். ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவேகானந்தனை கைது செய்தனர்.
இவ்வழக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடித்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், மற்றொரு பிரிவில் ஒரு மாத சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என,
நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement