சென்னை : ஐந்து மொழிகளில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகையர் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், இன்று வெளியாகிறது.
இப்படத்தை, அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான 'லைகா' சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு, நீதிபதி எம்.சுந்தர் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ''பெரும் பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை, திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால், மிகுந்த இழப்பு ஏற்படும்,'' என்றார். இதையடுத்து, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார்.