சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளியை, அரசே ஏற்று நடத்தக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவியின் மரண சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் கலவரம் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள், பொருட்கள் சூறையாடப்பட்டன. மாணவி மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,போலீசும், கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவும் விசாரிக்கின்றன. பள்ளி மீண்டும் இயங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாணவர்களின் பாதுகாப்பை கருதி, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளியை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கும்படி, மனுவில் கோரியிருந்தார்.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்னைகள் இருக்கும். அதற்காக அரசு ஏற்கும்படி கோர முடியுமா?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. பின், 'மனுவில் எந்த தகுதியும் இல்லை; நியாயமான காரணம் இல்லை' எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.