புதுடில்லி: இந்தியாவில் 5ஜி சேவையை, பிரதமர் மோடி இன்று (அக்.,1) துவக்கி வைத்தார்.
இந்தியாவில் 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது.
இந்நிலையில், டில்லி பிரகதி மைதானத்தில் இன்று (அக்.,1) இந்திய மொபைல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்ட அரங்குகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5ஜி சேவை, முதல்கட்டமாக,ஆமதாபாத், சண்டிகர், புனே, குருகிராம், கோல்கட்டா, மும்பை, பெங்களூர், காந்திநகர், ஜாம்நகர், லக்னோ, ஐதராபாத்,சென்னை நகரங்களில் கிடைக்கும். பின்னர் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரிலையன்ஸ் ஜியோவின் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாகனத்தை இயக்கிய பிரதமர்
5ஜி சேவையை துவக்குவதற்கு முன்னர் ,எரிக்சன் நிறுவனத்தின் அரங்கில் பிரதமர் மோடி விர்ச்சுவலாக காரை இயக்கினார். இது இந்தியாவில் 5ஜி சேவை துவங்கியுள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மோடி இயக்கிய கார், ஸ்வீடன் நாட்டில் இருந்தது. அதனை 5ஜி தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் இருந்து இயக்கும் வகையில் இணைக்கப்பட்டிருந்தது. அதனால், இங்கிருந்தபடி காரை மோடி கட்டுப்படுத்தினார்.