மயிலாடுதுறை:ஆயுதபூஜையை முன்னிட்டு சீர்காழி அருகே சிலம்பாட்ட மாணவர்கள் இணைந்து வீர விளையாட்டு உபகரங்களுக்கு சிறப்பு வழிபாடு. கிராமம் கிராமமாக சென்று மரபு கலையை இலவசமாக பயிற்றுவிக்கிறார் இளைஞர் ஒருவர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தர் இயற்கை விவசாயி இளைஞர் தினேஷ். விவசாயம் செய்வதோடு ஓய்வு நேரங்களில் கிராமம் கிராமமாக சென்று தமிழர் வீரவிளையட்டு மரபு கலைகளை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே முடங்கிய ஏழை மாணவர்களுக்கு அந்தந்த கிராமத்திற்கே சென்று தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க துவங்கிய தினேஷ் தற்போதும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரபு கலையை பயிற்றுவித்து வருகிறார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் கூடிய பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் தங்களது வீர விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து கிராமமக்கள் முன்னிலையில் பல்வேறு வீரவிளைட்டுகளை நிகழ்த்தி காட்டினர்.
3 வயது சிறுவர்கள் முதல் 20 வயது கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்டு நடுகம்பு, நெடுகம்பு, அலங்கார கம்பு, இரட்டைகம்பு, குத்துவரிசை, அருவாள் வீச்சு, வாள்வீச்சு, பிச்சுவாகத்தி, வேல்கம்பு,கட்டைக்கால், சுருள் வாள் வீச்சு என பல்வேறு வீரவிளையாட்டுகள் தற்காப்பு கலைகள் நடைபெற்றது. சுற்றியிருந்த பெற்றோர் மற்றும் கிராமமக்கள் மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்ச்சாகபடுத்தினர்.
செல்போன் தொலைக்காட்சி என மாறிய இன்றய மாணவர்களிடையே மரபுவழி தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு மனவலிமையையும்,உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறிய கிராமமக்கள் இளைஞர் தினேஷ்குமாரின் முயற்ச்சியை பாராட்டினர்