வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவுபுதிய மோட்டார் வாகன சட்டப்படி, பைக் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
![]()
|
புதுச்சேரியில் இந்த விதிமுறை பற்றி கவலைப்படாமல், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பறக்கின்றனர். இதன் காரணமாக விபத்தில் சிக்குபவர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.
உயிரிழப்பு
ஹெல்மெட் அணியாததால், விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகன ஓட்டிகள் கடந்த 2021ம் ஆண்டு 107 பேரும், இந்தாண்டு இதுவரை 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில சாலை பாதுகாப்பு குழுவிற்கு தேசிய சாலை பாதுகாப்பு குழு உத்தரவிட்டு இருந்தது
.அதன்பேரில், முதற்கட்டமாக போலீசாரும், அதனை தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது.அடுத்தகட்டமாக, பொதுமக்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆலோசனை கூட்டம்
இந்த சூழ்நிலையில் நேற்று, சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்ட சபை வளாகத்தில் நடந்தது.அமைச்சர்கள் நமச்சிவாயம்,லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கலெக்டர் வல்லவன், அரசுச் செயலர்கள் அருண், கேசவன், முத்தம்மா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குனர் ரவிதிப் சிங் சஹார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் புதுச்சேரியில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.
விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன்பிறகு கட்டாயமாக ஹெல்மெட் அணிய செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.நகர பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வேகமாக செல்ல வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விழுப்புரம், கடலுார், இ.சி.ஆர்., உள்ளி்ட்ட நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டிகள் அசுர வேகத்தில் பறக்கின்றனர்.எனவே முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் செல்லும் பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
![]()
|
கால அவகாசம்
மோட்டார் வாகன சட்டப்படி, பைக் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் இருப்பதால், இதுகுறித்து மாநில அரசு புதிதாக ஏதும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை.எனவே, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போதிய கால அவகாசம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, அதன் பிறகு படிப்படியாக போலீஸ் நடவடிக்கையை அமல்படுத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது.இதற்கான கால அவகாசம் குறித்து முதல்வரிடம் போக்குவரத்து போலீசார் கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன்பிறகு, களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.எனவே, மாநிலத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்வோர் கட்டாய் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது. இதை அமல்படுத்தவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.