வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'ஹிந்து என்றொரு மதம் இல்லையென்றால், சைவம், வைணவ மக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்படுமா?' என, தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
![]()
|
'மாமன்னன் ராஜராஜ சோழன் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல' என்று திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதை தொடர்ந்து, 'ஹிந்து மதம் என்ற ஒன்றே கிடையாது' என, ஒரு தரப்பு கூற துவங்கி உள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., செயலரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கூறியதாவது:
ஹிந்து மதம் என்ற ஒன்று கிடையாது என்று, திருமாவளவன், வெற்றிமாறன், கமல், சீமான் பேசுவது சுத்த அபத்தம்.
அவர்கள் சொல்லும் வாதம் ஏற்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஏற்கப்பட்டால் கிறிஸ்துவர், இஸ்லாமியரை விட, சைவம் மற்றும் வைணவ மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். எனவே, சைவம் மற்றும் வைணவ மக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கொடுக்க ஒப்பு கொள்வரா?
இது தவிர, ஹிந்து மதம் இல்லையென்றால், இடஒதுக்கீடு என்ற அடிப்படை கட்டமைப்பே தகர்ந்து போகும். இந்த விபரீதம் புரியாமல் தான் அவர்கள் பேசுகின்றனர்.
தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை திரட்டி போய் நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர் என, வைத்து கொள்வோம். ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் கோரிக்கை, நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டால் என்ன ஆகும்?
இந்தியாவில் பெரும்பான்மையை உள்ளடக்கியதாக இருக்கும் மதம் என்றால், அது ஹிந்து மதம். அதுவே இல்லை என்றால், சிறுபான்மை இனம் என்பதே இல்லாமல் போகும்.
தாங்கள் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் என்று, கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் கூற முடியாது. சிறுபான்மை இனம் என்று சொல்லக்கூடிய ஒரு கட்டமைப்பு கட்டாயம் தகர்ந்து போகும்.
ஹிந்து மதம் ஜாதியை கற்பித்தது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது, இட ஒதுக்கீட்டு கொள்கை.
ஹிந்து மதமே இல்லாத நிலையில், ஜாதிகளும் இல்லாமல் போகும் என்றால், இட ஒதுக்கீட்டு கொள்கையும், அதன் வழி செயல்படுத்தப்படும் திட்டங்களும் இல்லாமல் போகும் தானே.
விபரீதம் புரியாமல், வெற்று கூச்சல் இடுவோர் பேச்சை நம்பி, 'ஹிந்து மதம் என்ற ஒன்றே கிடையாது' என, உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்று நிரூபிக்க, சிலர் முயற்சிப்பதாக வைத்து கொள்வோம்.
அதை உச்ச நீதிமன்றமும் ஏற்று, 'இனி எதற்கு இடஒதுக்கீடு?' என்ற கேள்வியை கேட்டு, இடஒதுக்கிட்டையே ரத்து செய்து விட்டால் நிலைமை என்னாகும்?
கமல், திருமாவளவன், சீமான், வெற்றிமாறன் போன்றோர் வாதப்படி, ஹிந்து என்ற மதம் இல்லை என்றால், தமிழகத்தில் ஹிந்து அறநிலைய துறைக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்து, அந்த துறையே இல்லாமல் போகும்.
அதன் கீழ் வரும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களின் நிர்வாகம் என்னாகும்; கோவில் சொத்துக்கள் என்னாகும் என்ற சர்ச்சையும் எழும். அதே நிலை தான், சிறுபான்மை இனத்துக்கும் ஏற்படும்.
![]()
|
சிறுபான்மையின நலத் துறையின் கீழ் வரும் 'வக்பு' வாரியத்தின் கட்டுப்பாடில் இருக்கும் மசூதி மற்றும் பள்ளிவாசல்கள் நிலையும் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு விடும்.
வார்த்தைக்கு வார்த்தை அம்பேத்கரை துணைக்கு அழைக்கும் திருமாவளவன், அவர் கொள்கைக்கு முரணாக செல்கிறார்.
'யார் கிறிஸ்துவர் இல்லையோ, யார் முஸ்லிம் இல்லையோ; மற்ற அனைவருமே பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள்' என்பதை தான், தெள்ள தெளிவாக கூறி இருக்கிறார் அம்பேத்கர்.
தான் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திலும், இதை தான் கூறி இருக்கிறார். சமண, சீக்கிய, புத்த சமயங்களையும் கூட, ஹிந்து மதத்தின் கீழ் தான் அம்பேத்கர் கொண்டு வந்திருக்கிறார்.
அரசியல் அமைப்பு சட்டத்திலும், ஹிந்து சட்டத்திலும், அம்பேத்கர் இதை தெளிவாக குறிப்பிட்டிருக்கும் போது, ஹிந்து மதமே கிடையாது என, திருமாவளவன் போன்றோர் எப்படி பேசுகின்றனர்? மொத்தத்தில் எதையும், யாரையும் அவர்கள் ஏற்க தயாரில்லை.
ஏதோ ஒன்றை சொல்லி, மக்களிடையே குழப்பமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக, திட்டம் போட்டு இப்படி அபத்தமாக பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் --.