புதுச்சேரி : ஐந்து திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், மேலகுப்பத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகள் காயத்ரி. திருமணமாகி விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவரை, புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தை சேர்ந்த தெய்வநாயகம், 42; என்பவர், கடந்த 2020ம் ஆண்டு பெண் கேட்டார்.
பின்னர், தனக்கு முதல் திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டதாக கூறி சாரம், பிருந்தாவனத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அப்போது, காயத்ரிக்கு 7 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக கொடுத்தனர்.
இந்நிலையில், திருமணமாகி, 5 நாட்களில் தெய்வ நாயகம் முதல் திருமணத்தை குறைக்கூறி காயத்ரியை தவறாக பேசியுள்ளார். இதனால் காயத்ரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
பின் சமாதானமாகி இருவரும் சேர்ந்து வாழ்ந்ததில், காயத்ரி கர்ப்பமடைந்தார். அப்போது, தெய்வநாயகம் குடித்துவிட்டு காயத்ரியை தாக்கினர்.
அதனால், காயத்ரியை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு காயத்ரி, குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்தபோது, தெய்வநாயகம், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பிரேமா என்பவரை திருமணம் செய்து, அவரையும் விரட்டியது தெரிய வந்தது.
இதுபற்றி கேட்ட, காயத்ரியை, தெய்வநாயகம் மற்றும் அவரின் குடும்பத்தார் திட்டி தாக்கினர். மேலும், ரவுடிகள் மூலம் மிரட்டினர்.
இதுகுறித்து காயத்ரி புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது கணவருக்கு தற்போது வரை 5 திருமணம் நடந்துள்ளதாகவும், இது பற்றி கேட்ட தன்னை யும், தனது குடும்பத்தையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சத்யா வழக்கு பதிந்து தெய்வநாயகம் மற்றும் அவரது தாயை தேடிவருகின்றனர்.