வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :கட்சிக்கு பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக, உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநில கட்சியான சிவசேனா சமீபத்தில் பிளவுபட்டது. அதில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., ஆதரவைப் பெற்று முதல்வரானார். கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் மோதல் ஏற்பட்டதால் சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
![]()
|
இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் நவ., 3ல் நடக்கும் இடைத்தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டிய சின்னம் குறித்து, சிவசேனாவின் இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரை கடிதத்தை சமர்ப்பித்திருந்தனர். இதில் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தையும், ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு, வாள், கேடயம் சின்னத்தையும் ஒதுக்கியது.
இது குறித்து உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய பரிந்துரை பட்டியலை, ஷிண்டே தரப்பினர் பரிந்துரை பட்டியல் அளிப்பதற்கு முன்பே, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.
எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவற்றைப் பார்த்து, 'காப்பி' அடித்து, அதே விபரங்களை ஷிண்டே தரப்பினரும் தங்கள் பரிந்துரை பட்டியலில் தெரிவித்தனர்.
இதற்கு பின் தான், எங்கள் பரிந்துரை பட்டியல், ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement