வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ள நிலையில், அவர்கள் மீது எந்தெந்த பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கவில்லை என்றும், இன்னும் 8 பேர் போலீஸ் விசாரணையில் இருந்தும் அவர்களை ஏன் கணக்கில் காட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டிய கடமை பா.ஜ.,வுக்கு உள்ளது. கோவை மாநகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஜூன் 2019ல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கோவையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் இருவர் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள். கோவையில் காஸ் சிலிண்டர் வெடித்ததாகவே கூறிவந்த அதிகாரிகள், பின்னர் கோலி குண்டு, ஆணிகள் உள்ளதாக கூறினர். அதன்பின்னர் அவரது வீட்டை சோதனை செய்ததில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி உள்ளிட்ட வெடிப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அதனை முறையாக தெரிவிக்காமல் இந்த அரசு மறைத்துள்ளது.

குண்டுவெடிப்புக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அக்.,21ல் ஜமேசா முபினின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை முபின் பயன்படுத்தியுள்ளார். ‛எனது மரணத்தை ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற ஸ்டேட்டசை இருநாட்களுக்கு முன்னதாகவே வைத்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக யாராவது ஒரு பதிவு போட்டால் கூட அவரை கைது செய்து பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும் போலீசார், தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்தும், அவர்கள் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும் எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கவில்லை.

இன்னும் 8 பேர் போலீஸ் விசாரணையில் உள்ளனர், அவர்களை ஏன் கணக்கில் காட்டவில்லை? யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது? ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் தான் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மூலம் கலவர பகுதியாக கொங்கு பகுதி மாற்றப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நடந்த சம்பவத்தை தமிழக அரசு மூடி மறைப்பதாக குறிப்பிட்டுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். 2021ம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை மிகவும் வலிமையாக இருந்தது.
உளவுத்துறை
என்ஜிவோ, மிஷனரி செய்கிற வேலையை தமிழக உளவுத்துறை செய்து வருகிறது. உளவுத்துறையினர் அரசியலில் மட்டுமே உளவு பார்க்கின்றனர். தமிழக உளவுத்துறையில் 60 சதவீதம் பேர் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். தமிழக போலீஸின் செயல்பாடு வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.