சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த தமிழக போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்.,2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அக்.,2ல் நடைபெற இருந்த அனைத்து பேரணி, நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்க முடியாது என போலீஸ் மற்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நவம்பர் 6ம் தேதி ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், ஊர்வலத்திற்கு அனுமதி தராவிட்டால், போலீஸ் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தது. இந்த நிலையில் நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.