சுவாதி கொலை வழக்கு; கொலையாளி தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு| Dinamalar

சுவாதி கொலை வழக்கு; கொலையாளி தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

Added : அக் 31, 2022 | கருத்துகள் (54) | |
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்
ராம்குமார், சுவாதி, சுவாதி கொலை வழக்கு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக, காவல் துறை தெரிவித்தது. இது தொடர்பான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: ஆணையத்தின் முன் ஆஜரான, புழல் சிறை வார்டன் பேச்சுமுத்து, 'மின்சார வயரை ராம்குமார் கடித்தபோது, லத்தியால் தள்ளி, அவரை காப்பாற்ற முயன்றேன்' என கூறினார்.

கைதிகளின் பாதுகாப்பை யும், மனித உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது, சிறை அதிகாரிகளின் கடமை. ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணத்தை, விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சிறையில் ராம்குமார் உயிரிழந்ததற்கு, தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

மனித உரிமை மீறலுக்காக, உயிரிழந்த ராம்குமாரின் தந்தை பரமசிவனுக்கு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதுமான அதிகாரிகளை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதை கண்டறிய, சுதந்திரமான விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X