ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஒத்திவைப்பு: மேல்முறையீடு செய்ய முடிவு| Dinamalar

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஒத்திவைப்பு: மேல்முறையீடு செய்ய முடிவு

Updated : நவ 05, 2022 | Added : நவ 05, 2022 | கருத்துகள் (74) | |
சென்னை: மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக்கூட்டம், அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், நாளை(நவ.,6) நடக்க இருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒத்தி வைத்துள்ளது.விஜயதசமியை முன்னிட்டு, அக்., 2ல், 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனு கொடுத்தனர். போலீசார் நிராகரித்ததால், உயர்
RSS, RSS RALLY, TAMIL NADU, RALLY, MEETING, POSTPONED, CHENNAI HIGH COURT, HIGH COURT, ஆர்எஸ்எஸ், பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம்,  சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,

சென்னை: மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக்கூட்டம், அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், நாளை(நவ.,6) நடக்க இருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒத்தி வைத்துள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு, அக்., 2ல், 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனு கொடுத்தனர். போலீசார் நிராகரித்ததால், உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.



இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது.ஆனால், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தடை; கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றால், சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காட்டி, அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவ., 6ல் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.



இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்,ஆர்.இளங்கோ, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜி.ராஜகோபால், என்.எல்.ராஜா, வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர் வாதாடினர். இதையடுத்து, 'உளவுத் துறை அறிக்கையை ஆராய்ந்த பின், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, நீதிபதி கூறியிருந்தார்.



latest tamil news

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உளவுத் துறை அறிக்கையை ஆய்வு செய்ததில், 2008 முதல் 2011ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; இதை ஏற்க முடியாது.அறிக்கையில், பதற்றம் நிறைந்த பகுதிகளாக, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய ஆறு நகரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன.



இவை தவிர, மற்ற இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி, அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பிய பின், அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, மனுதாரர்கள் காவல் துறையிடம் விண்ணப்பிக்கலாம். அதை பரிசீலித்து, சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.



மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக் கூட்டம், அணிவகுப்பு நடத்திக் கொள்ள வேண்டும். அணிவகுப்பில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழக் கூடாது. அவ்வாறு நடந்தால், அதற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும். தனி நபர், மதம், ஜாதி ஆகியவை குறித்து அவமதிக்கும் வகையில், பாடல் பாடவோ, பேசவோ கூடாது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது.



இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படும் விதமாக செயல்படக் கூடாது. பொது மக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். காயத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உடன் எடுத்த செல்லக் கூடாது. அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.




ஒத்திவைப்பு


இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ் சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், மஹாத்மா காந்தி பிறந்த 125 ஆண்டு முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்.,2 ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக போலீசாரிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினோம்.



தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, அணிவகுப்பை நவ.,6 ல் நடத்த நீதிமன்றம் கூறியது. அதை ஏற்று, நாங்கள் நவ.,6 ல் அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று(நவ.,4) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளா, மே.வங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் சட்ட ரீதியாக, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவ.,6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வன்னியராஜன் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X