சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.
தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்
திருத்தப் பணி நடக்க உள்ளது. இதற்காக இன்று காலை 10:00 மணிக்கு அனைத்து சட்ட சபை தொகுதிகளிலும் வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், ஆண்கள் - 3,03,95,103 பேர்
பெண்கள் - 3,14,23,321 பேர்
3ம் பாலினத்தவர்கள் 7,758 பேர்
இறந்த வாக்காளர்கள் 2.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் என மொத்தம் 17.69 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைவாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு முகாம்
இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.இம்மாதம் 12, 13, 26, 27ம் தேதிகளில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும்.
இம்முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடக்கும்.இம்முறை 17 வயதான இளைஞர்களும் இளம்பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு 18 வயதானதும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.