வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் உருவானதல்ல எனவும், கோவில் நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தவறு எங்கு நடந்தாலும், அதை தட்டிக்கேட்கின்ற, சுட்டிக் காட்டுகின்ற கடமை ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் செய்யவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, மன்னர்களால், நமது முன்னோர்களால் உருவானது. சிதம்பரம் நடராஜர் கோவில் நிலம் அரசுக்கு சொந்தமானது.

கோவிலின் உள்ளே இஷ்டத்திற்கு கட்டடங்களை கட்டி எழுப்பி இருக்கிறார்கள். கோவில் வருமானங்கள், சொத்துகள், நகைகளை ஆய்வு செய்வது அறநிலையத்துறையின் கடமை, அதற்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. நிர்வாக குளறுபடிகளை பற்றி கேட்கும்போது பதிலளிப்பது தீட்சிதர்களின் கடமை.
எங்கள் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் நாங்களும் எடுத்து சொல்ல தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.