சிதம்பரம்: ''சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்பதை, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உறுதி செய்துள்ளன. ஆனால், 'சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது,'' என, வழக்கறிஞர் சந்திரசேகரன்
தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தரப்பில், வழக்கறிஞர் சந்திரசேகரன் நேற்று அளித்த பேட்டி:கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில், ஹிந்து அறநிலையத்துறை, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடையூறு செய்து, சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதற்கு பொது தீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனையும், பதில்களும் அளிக்கப்பட்டுள்ளன.சமீப காலமாக, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள், சிறார்களை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இவை குறித்து பொது வெளியில் தீட்சிதர்கள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
|
அந்த வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு விசாரிப்பதில் உள்நோக்கம் உள்ளதால், பாரபட்சமின்றி புலன் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், தேசிய குழந்தைகள் நல வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தற்போது, கடைசியாக கடந்த 3ம் தேதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் மிக தெளிவாக, கோவில் எவ்வாறு தீட்சிதர்களுக்கு பாத்தியமானது என்பதற்கு உரிய ஆவணத்தை கூறியுள்ளோம்.
முக்கியமாக தென்னாற்காடு மாவட்ட அரசிதழ் 1௮78ல் அப்போதைய கலெக்டர் வெளியிட்டதை தெளிவாக குறிப்பிட்டு, அதன் பிரகாரம் தீட்சிதர்கள் கோவிலுக்கு பாத்தியமானவர்கள் என்பதை தெரிவித்துள்ளோம்.
இதை, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன என, தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியுள்ளோம்.ஆனால், நாங்கள் கொடுத்த பதிலை சிறிதும் ஏற்காமல் மீண்டும் மீண்டும் தவறான வகையில், பொது வெளியில், 'தீட்சிதர்களுக்கு கோவில் பாத்தியமானது அல்ல; நாங்கள் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று அமைச்சர் கூறுவது வேதனை
அளிக்கிறது.ஹிந்து அறநிலையத்துறை மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.சட்ட ஆலோசகர்களை கலந்தாலோசித்து, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.