புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரளிவாளனை தொடர்ந்து நளினி, முருகன் , ரவிந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, 1999ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், கருணை மனு பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பேரறிவாளனை, தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நளினி உள்ளிட்டோர் தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தமிழகஅரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் விசாரித்தனர்.

இந்நிலையில், இந்த மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நளினி, முருகன், சாந்தன், ரவிந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்படுகின்றனர்.பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும். இதனால், 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த 6 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு மாநில அமைச்சரவை அனுப்பி வைத்தது.
மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா? என்ற கேள்விக்கும், மாநில அமைச்சரவையின் முடிவுகளை மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஏற்றிருக்க வேண்டும். நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரின் நடத்தை நன்றாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் பிறப்பித்தனர்.