சென்னை: தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரிவினைவாதம் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அவதுாறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது பிரிவினையாக அவர் பேசியுள்ளார். பல மாநிலங்கள், கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த தேசத்தில், தமிழ்நாட்டை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது: அரசியல் என்பது பதவிக்கான, அதிகாரத்திற்கான, பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

மிக மிகக் குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகளை பெற்று கட்சியை வழி நடத்துவார்கள்.
அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா? கோட்பாடா? இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம் என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல்.
தனி தமிழ்நாடு

இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். இது விடுதலைக்கான முழுக்கம், உலகில் ஒடுக்கு முறைக்கு உள்ளான அனைவருக்குமான முழக்கம்.
தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாக தான் மத்திய அரசு இருக்க வேண்டும்.
மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில் பிற இனத்தினர் மீது வெறுப்பை உமிழக்கூடாது. தமிழ்தேசிய இயக்கத்தில் பிறகட்சிகள் செய்ய முடியாததை விசிக சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.