சென்னை: அதிமுக கூட்டணியில் இருப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, '2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் தான் கூட்டணி. 2026ல் ஆட்சி அமைப்போம்' என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் நாங்கள் உறுதியாக ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ற வியூகத்தை 2024 லோக்சபா தேர்தலில் வகுப்போம். அதை நோக்கியே அரசியல் பயணத்தை எடுத்து வருகிறோம். பாமக 2.0 என்ற செயல் முழக்கத்துடன் செயல்படுகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் இன்னும் அவர்களால் தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியவில்லை. தமிழக அரில் நிதி பற்றாக்குறையும், திமுக கட்சிக்குள் நிறைய முரண்பாடுகளும் உள்ளன.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், '2026ல் அதிமுக கூட்டணியில் இருக்க மாட்டீர்களா' என கேள்வி எழுப்பினர். அதற்கு மழுப்பலாக பதிலளித்த அன்புமணி, 'பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் கூறுகிறேன். அதை விடுத்து அதிமுக கூட்டணியில் இருப்பீர்களா இல்லையா எனக் கேட்கிறீர்கள்' என கூறினார்.
அன்புமணியின் இந்த பதிலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா அல்லது அதிமுக உடனான கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமையாக இருப்போம் என கூறுகிறாரா என பாமக கட்சியினர் குழம்பி போயுள்ளனர்.