இஸ்லாமாபாத்: இந்தியாவில் தேசியவாத நிலைபாட்டை பா.ஜ., ஆட்சியில் இருக்கும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு இல்லை என பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும்.
ஆனால் காஷ்மீர் பிரச்னை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்னையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பா.ஜ., அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்னைகளில் தேசியவாத நிலைபாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜ., ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை.

2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது.
நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன். உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. இவ்வாறு இம்ரான் கூறியுள்ளார்.