சென்னை:முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தால், சில நிமிடங்களில் மனு ஏற்கப்பட்ட தகவலை, உரிய பதிவெண்ணுடன், எஸ்.எம்.எஸ்., வழியாக தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அமைந்து உள்ளது.
கோரிக்கை
இங்கு மனு கொடுக்க, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மனு கொடுக்க நேரடியாக வராமல், இணையதளம் வழியாக அனுப்பும்படி, அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.
ஆனாலும், ஏழை மக்கள் தங்கள் பிரச்னைக்கு, முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தாலாவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நேரில் வருகின்றனர்.
முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், முன்பு அறை நுழைவு வாயிலில் நின்றபடி மனு கொடுக்கும் அளவுக்கு மட்டுமே இடம் இருந்தது. தற்போது, அந்த அறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மனு கொடுக்க வருவோர் உள்ளே செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமர, இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
முன்பு மனு கொடுத்தால், பதிவு எண் இல்லாத ஏற்பு சான்றிதழ் வழங்கப்படும். மனுவை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, பதிவு எண் எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்ப ஓரிரு நாட்களாகும்.
நடவடிக்கை
கடந்த வாரம் முதல், மனு வாங்கிய ஒரு சில நிமிடங்களில், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரருக்கு பதிவெண்ணுடன், ஏற்பு சான்றிதழ் எஸ்.எம்.எஸ்.,சில் அனுப்பப்படுகிறது.
மனு மீதான நடவடிக்கையை, இணையதளம் வழியாக மனுதாரர் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, முதல்வர் தனிப்பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
கடந்த வாரம் முதல், மனுதாரர் தரும் மனுவை, உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, பதிவு எண் விபரத்தை, ஒரு சில நிமிடங்களில் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறோம்; காகித ரசீது தருவதில்லை.
தற்போது நேரடியாக வழங்கும் மனுவுக்கு, விரைவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தபால் மற்றும் இணையதளம் வழியே வரும் மனுக்களை, துறை வாரியாக பிரித்து, அவர்களுக்கு மனு ஏற்பு சான்றிதழ் வழங்குவது தாமதமாகிறது.
அதையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.