திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் அருணாவை 19, கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாயார் ஆறுமுகக்கனி 45, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவரது மனைவி ஆறுமுகக்கனி. இவர்களது மகன் முப்பிடாதி 23. மகள் அருணா .
பேச்சியும், மகனும் சென்னையில் லாரி டிரைவர்களாக உள்ளனர். மகள் அருணா கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்தார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். நேற்று அவரது வீட்டுக்கு பெண் பார்க்க வருவதாக இருந்தனர்.
இதற்காக அருணா விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.
கழுத்தை நெரித்துக்கொலை
நேற்று முன்தினம் இரவில் அருணா தாயாரிடம், 'தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் 'எனவும் கூறினார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'மாப்பிள்ளை வீட்டார் வந்தாலும் மாப்பிள்ளையிடம் நான் காதலிப்பது குறித்து தெரிவிப்பேன்' எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமற்ற தாயார் ஆறுமுககனி, மகள் அருணாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் விடிய விடிய மகள் உடலுடன் இருந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டில் இருந்த ஹேர் டை, கண்ணாடி துண்டுகள், தூக்க மாத்திரைகளை மிக்ஸியில் அரைத்து குடித்தார். கத்தியால் இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
அருகில் வசிப்போர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அருணா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுககனி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.