மதுரை:மதுரை தி.மு.க.,வில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள 'ஈகோ' யுத்தத்தால் மாவட்ட செயலர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.
மதுரை நகர் செயலர் பதவி தளபதி எம்.எல்.ஏ.,வுக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதால், தி.மு.க.,வில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டது.
பின்னடைவு
தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலரான அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஒரே அணியில் களம் இறங்கியதால், அமைச்சருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மதுரையில் கட்சியினருக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் 'செய்நன்றி மறந்தவர்களுக்கு விரைவில் வீழ்ச்சி வரும்' என, அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
துடுக்கு பேச்சு
இதன் தொடர்ச்சியாக, கட்சித் தலைமை சுமுகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, மதுரையில் நிதி அமைச்சரின் துடுக்கு பேச்சு நின்றபாடில்லை.
மதுரை கூட்டுறவு வார விழாவில், 'கூட்டுறவுத் துறையில் கடத்தல், 'ரெய்டு'கள் நடக்கின்றன. இத்துறை செயல்பாடுகள் திருப்தியில்லை' என மூத்த அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக, நிதி அமைச்சர் 'கொளுத்தி'ப் போட்டார்.
அடுத்த நாளே, அமைச்சரின் மத்திய தொகுதிக்கு உட்பட்ட கவுன்சிலர்கள், வட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில், 'கட்சியே குப்பையாக கிடக்குது' என, அமைச்சர் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது போன்ற அவரது விமர்சனங்கள் நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
புறக்கணிப்பு
இந்நிலையில், மதுரையில் நடந்த மாநகராட்சி மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டத்தை, 11 தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
கட்சியை விமர்சித்த அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாவட்ட செயலர்கள் உத்தரவால் அவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது.
இதற்கு பதிலடியாக, மாவட்ட செயலர் தளபதி நடத்திய நகர் தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஆதரவாளரான மேயர் இந்திராணி, பகுதி செயலர்கள், கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இதனால் மதுரை தி.மு.க.,வில் மீண்டும், ஈகோ யுத்தம் வெடிக்க துவங்கியுள்ளது.
விரைவில் முடிவு
மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கட்சியை வைத்து தான் அமைச்சர், மாவட்ட செயலர்கள். மூத்த நிர்வாகிகளை புறக்கணிப்பதிலேயே அமைச்சர் குறியாக உள்ளார். இளைஞரணி செயலர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி நவ., 29ல் நடக்கிறது.
இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தன் ஆதரவாளர்களை பங்கேற்க விடாமல் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.
கட்சி, மூத்த நிர்வாகிகளை அமைச்சர் தியாகராஜன் அடிக்கடி விமர்சனம் செய்வதால் கட்சித் தலைமை அதிருப்தியில் உள்ளது. மேலும் மூத்த அமைச்சர்கள் துறைசார்ந்த ஏராளமான 'பைல்'கள் நிதித்துறையில் கிடப்பில் உள்ளதால், முதல்வர் ஸ்டாலினிடம் அவர்களும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.இதனால் நிதித்துறையை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அளிக்கும் எண்ணமும் முதல்வரிடம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதேநேரம், முதல்வர் மருமகன் சபரீசனின் நட்பில் தியாகராஜன் உள்ளதால், துறை மாற்றம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.