ஆசிரியர் : என். பிரதீபன்
வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்
டோல்ப்ரீ : 1800 425 7700
75500 09565
பக்கம் : 308, விலை : ரூ. 400
ஒரு வரலாற்றை பத்திரிகையாளர் எழுதுவதற்கும் மற்றவர்கள் எழுதுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதை இந்த புத்தகம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. நீலகிரி மாவட்டத்தின் சிறப்பம்சங்களை இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த பணியை தனது 26 ஆண்டு கால பத்திரிகை அனுபவத்தைக் கொண்டு சாத்தியப்படுத்தி இருக்கிறார் பிரதீபன். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை, அக்கறையை, விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
'ஒருபுறம் சுற்றுலா தலங்களைப் பற்றி எளிமையான ஆர்வமூட்டும் அறிமுகம். மறுபுறம் வரலாற்று நிகழ்வுகள், சூழலியல் சார்ந்த அக்கறை, குளிர் பிரதேச பூர்வகுடிகளைப் பற்றிய சமூகப் பண்பாட்டு அணுகுமுறைகள், கலைகள், தொல்லியல் தகவல்கள், அரசியல் தலைவர்களின் வருகைக்கான பின்னணி, சினிமா படப்படிப்புகள் பற்றிய சுவாரசியமான செய்திகள்' என ஊட்டி என்று அழைக்கப்படும் கோடை வாசஸ்தலத்தின் வரலாறும் சிறப்புகளும் முக்கியத்துவமும் சமூக கரிசனத்துடன் ஆவணப்படமாக கண் முன் விரிகிறது.
பூச்சிகளை உண்ணும் தாவரம் தங்கத்தை உருக்கும் அதிசயம், நீலமலை (நீலகிரி) பெயருக்கான காரணம், வரலாற்றைப் பறை சாற்றும் கற்கால பாறை ஓவியங்கள், கோத்தர் மக்களின் 'ஆட்குபஸ்' உடை, மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட குரும்பர், பனியர் பழங்குடிகளின் 'பூ புத்தரி' திருவிழா, தோடர் போர்வைக்கு புவியியல் குறியீடு, படுகரின மக்களின் குல தெய்வ பண்டிகை 'தெவ்வப்பா', ஊட்டியின் அடையாளமான ஆதம் நீரூற்று, சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த 'ஊட்டி வர்க்கி', குடிநீராக பயன்படுத்தப்பட்ட ஊட்டி ஏரி, ஊட்டியில் 'கின்னஸ் பூங்கா', கட்டட காடுகளால் பொலிவிழந்து வரும் மலையரசி, நீலகிரிக்கு தேவையான 'சிப்கோ' இயக்கம் உட்பட பற்பல விஷயங்களை அள்ளத் தெளித்து இந்த புத்தகத்தை ஊட்டி தொடர்பான ஒரு தகவல் களஞ்சியமாக படைத்திருக்கிறார். பிரதீபன்.
- இளங்கோவன்