கடலுார்,-பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,) வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதுகலை பட்டப்படிப்பு, 3 ஆண்டு பாலிடெக்னிக், தொழிற்கல்வி போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் 6ம் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmw.tn.gov.in./welfschemes.htm//scholarship schemes என்ற அரசு இணையதளத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளன.
மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களில் தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறுகலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.