நாமக்கல்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், கண்களில் கறுப்புத்துணி கட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் வேலு தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன், சங்க மாநில பொருளாளர் தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்கள், சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய தளவாடங்கள், மழை கோட், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களில் உயிர் நீத்தோரின் குடும்பத்தில் இருந்து, கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில், தகுதி வாய்ந்தவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட முதுநிலை பட்டியலின்படி, பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை தொலைதுார பணிகளுக்கு தொடர்ந்து அனுப்புவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கோஷம் எழுப்பினர்.