ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை வீடியோ வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 540 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். கைதுக்கு பயந்த 100க்கும் மேற்பட்ட படகுகளின் மீனவர்கள் வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்து விட்டு, வெறும் படகுடன் கரை திரும்பினர். இதனால் அவர்களுக்கு பெரும் தொழில் நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில படகுகளில் இருந்த மீனவர்களுக்கு குறைந்தளவே மீன்கள் கிடைத்தன. புயல் எச்சரிக்கையால் ஐந்து நாட்களுக்குபின் அவர்கள் கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வெளியீடு : இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன்பிடித்த போது அவர்களை விரட்டி விடும் வீடியோவை ஜி.பி.எஸ்., கருவியை சுட்டிக்காட்டி அந்நாட்டு கடற்படை வீரர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதனை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியிடம் காட்டியுள்ளனர். இது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் இனிவரும் நாட்களில் மீன் பிடிக்க செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.