புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று(நவ.,26) அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில்,

இந்த தருணத்தை , நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம் நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்து கூற விரும்புகிறேன்.
இன்று மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும், இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள், இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.