மதுரை-'மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலுதவி மையம் செயல்பட்டால், மனித ரத்தம் தரையில் பட வாய்ப்புள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதால் அனுமதிக்க முடியாது.
![]()
|
'அதற்கு பதில் கோவிலுக்கு வெளியே சித்திரை வீதிகளில் அமைத்தால் பக்தர்களுக்கு மட்டுமல்ல, வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்கின்றனர் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள்.
புனித இடம்
அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம்: மீனாட்சி அம்மன் கோவில் புனித இடம். அதிக பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் அவசரத்திற்கு முதலுதவி பெட்டிகளை வேண்டுமானால் ஆங்காங்கே வைக்கலாம்.
முதலுதவி மையத்தை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது. அப்படி அமைந்தால் ஆகமவிதிப்படி தவறு. அதற்கு பரிகாரம் செய்தாலும் அந்த பாவம் நம்மைவிட்டு போகாது. கோவில் கோவிலாக இருக்க வேண்டுமே தவிர, வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
ஐதீகம் காக்கணும்
ஹிந்து முன்னணி மாநில செயலர் முத்துக்குமார்: கோவில்கள் வியாபார ஸ்தலமாக மாற்றப்பட்டு வருவதையே ஜீரணிக்க முடியாத நிலையில், முதலுதவி மையம் கோவிலுக்குள் தேவையா. கோவிலுக்கென்று ஐதீகம், மரபு உள்ளது.
அதை மாற்றாமல், மாறாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை, பொறுப்பு. முதலுதவி மையம் கோவிலுக்குள் ஆடி வீதியில் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் வெளியே சித்திரை வீதியில் அமைத்தால் எல்லோருக்குமே பயன்படும் என்பதை அறநிலையத்துறை புரிந்துக்கொள்ள வேண்டும்.
மாற்று இடம்
விஸ்வ ஹிந்து பரிஷத் மதுரை கோட்ட செயலர் கே.எம்.பாண்டியன்: முதலுதவி சிகிச்சை மையம் வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் ஆகம விதிக்கு புறம்பாக சிகிச்சை என்ற பெயரில் ரத்தக்கரைப்படுவதோ, ஒருவேளை உயிர் சேதாரம் நடந்தாலோ கோவிலின் புனிதம் கெட்டுவிடும்.
சித்திரை வீதியில் கோவில் இடங்கள் நிறைய உள்ளன. அதில் ஏதாவது ஒரு இடத்தில் அமைத்தால் வெளி நோயாளிகளுக்கும் உதவியாக இருக்கும்.
மேல் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வந்து செல்ல வசதியாக இருக்கும். கோவிலின் புனிதம் கெடாமல், ஆகம விதிக்கு புறம்பாக செயல்படாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
![]()
|
நோக்கம் சிதையும்
ஆலயம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் தினகரன்: மன்னர்கள் தங்கள் காலத்தில் உணவு, மருத்துவம், ஆன்மிகத்திற்கு என, தனித்தனி இடங்களை உருவாக்கினர். அதற்கான புனிதங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால் அப்படி செய்தனர். தற்போது கோவிலுக்குள் எல்லாமே வந்துவிட்டால் கோவில் அமைத்ததற்கான நோக்கமே சிதைந்து போய்விடும்.
மீனாட்சி கோவிலுக்கு வெளியே சித்திரை வீதியில் அன்னக்குழி மண்டபம் இருந்தது. அங்கு தான் அக்காலத்தில் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அதுபோல் முதலுதவி மையம் கோவிலுக்கு வெளியே அமைந்தால் தான் புனிதம் காக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.