சென்னை : கருணாநிதி நினைவு நுாலகம் மற்றும் அண்ணா நுாலகத்துக்கு, புத்தக கொள்முதல் பணிகள் துவங்கி உள்ளதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பொது நுாலக பொறுப்பு இயக்குனர் இளம் பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் கருணாநிதி நினைவு நுாலகம், அடித்தளம் மற்றும் தரைத்தளம் முதல் ஆறு தளங்களுடன் கட்டப்படுகிறது. அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளன.
இந்நிலையில், கருணாநிதி நினைவு நுாலகம் மற்றும் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம் போன்றவற்றுக்கு தேவையான புத்தகங்கள், டிஜிட்டல் புத்தகங்களை கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
புத்தக விபரங்களை, மாதிரி பிரதியுடன், 'முதன்மை நுாலகர் மற்றும் தகவல் அலுவலர், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், சென்னை' என்ற முகவரிக்கு, டிச., 9ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
புத்தக விபரங்களை, www.annacentenarylibrary.org/ என்ற இணையதள முகவரியில், பூர்த்தி செய்ய வேண்டும். kclbookselection@gmail.com என்ற, இ- -மெயில் முகவரியிலும், புத்தக பட்டியலை அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.