சபரிமலை : மண்டல காலம் தொடங்கி, 10 நாட்களில் சபரிமலை வருமானம் 52 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் சன்னிதானத்தில் கூறியதாவது: மண்டல காலம் தொடங்கி 10 நாட்களில் அனைத்தும் சுமூகமாக நடக்கிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த வருமானம் 52.55 கோடி ரூபாயாகும். இதில் அரவணை விற்பனை ரூ. 23.58 கோடி. காணிக்கை ரூ.12.74 கோடி. அப்பம் விற்பனையில் ரூ.2.58 கோடியும், அறை வாடகையாக ரூ.49 லட்சமும் கிடைத்துள்ளது. இதில் பெரும் பகுதி திருவிழா நிர்வாகத்துக்காக செலவு செய்யப்படுகிறது.
அடுத்த 20 நாட்கள் தேவைக்காக 51 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. தினமும் சராசரியாக இரண்டரை லட்சம் டின் அரவணை விற்பனையாகிறது.
பக்தர்களுக்கு எந்த குறையும் வராத அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீலிமலை பாதையில் உள்ள பணிகள் அடுத்த வாரம் நிறைவு பெறும். சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.