தனி நாடு கோரிக்கை யை வலியுறுத்தி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து, முகநுாலில் கருத்து பதிவிட்ட, சி.ஆர்.பி.எப்., வீரர் குருமூர்த்தி என்பவருக்கு, அக்கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் அறிந்ததும், மேகாலயாவில் இருக்கும் குருமூர்த்தியை தொடர்பு கொண்டு தைரியம் அளித்துள்ளார், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை.
13 ஆண்டுகள்
இது குறித்து, வங்கதேச எல்லையோரம், மேகாலயா மாநிலத்தில் பணிபுரியும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் குருமூர்த்தி கூறியதாவது: மதுரை மாவட்டத்தை சேர்ந்த நான், 13 ஆண்டுகளுக்கு முன் துணை ராணுவ படையான சி.ஆர்.பி.எப்., படையில் வீரராக இணைந்தேன். தற்போது, எனக்கு வயது, 34. எல்லையோர மாநிலங்கள் பலவற்றிலும் பணியாற்றி விட்டு, இரு ஆண்டுகளுக்கு முன், மேகாலயாவுக்கு வந்தேன். எங்களை போன்ற வீரர்களுக்கு, நாட்டுப் பற்று தான் அடி நாதம். அதுதான் எங்கள் உயிர். பாகிஸ்தானியரிடம் இருந்து, காஷ்மீர் மண்ணின் ஒவ்வொரு அடியையும் காக்க, எப்படியெல்லாம் பாடுபடுகிறோம் என்பதை, அருகில் இருந்து பார்த்தால் தான், அதன் அருமை தெரியும்.
எங்களை போன்ற வீரர்களுக்கு தீர்க்கமான ஒரு எண்ணம் உண்டு. அது, காஷ்மீரையும் கடந்த அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும். ஆனால், எங்கிருந்தோ வரும் பணத்துக்கு அடிமை யாகி செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர், இந்த நாட்டை துண்டாக்க வேண் டும் என்ற எண்ணதோடு, தமிழகம் தனி நாடாக வேண்டும் என்று சொல்கின்றனர். அதைப் பார்த்து அமைதியாக இருக்க, ராணுவ வீரர்களும், எங்களை போன்ற துணை ராணுவப் படை வீரர்களும் என்ன கோழைகளா?
தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி, திருமாவளவன் பேசியதைப் பார்த்ததும், எனக்கு கோபம் வந்து விட்டது. இதற்கு பதிலடியாக, திருமாவளவனின் பேச்சை விமர்சித்து, முகநுாலில் வீடியோ பதிவு போட்டேன். அதில், என் கொந்தளிப்பான உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தேனே தவிர, தனிப்பட்ட முறையில், எந்த விமர்சனத்தையும் திருமாவளவன் மீது வைக்கவில்லை. 'நீ ஆம்பளையா இருந்தா... ஒரு நாள் ஒரே ஒரு நாள்... தனி தமிழ்நாடு வேணும்னு வீதியில வந்து போராடி பாரு...
உன்னையே இழுத்துட்டு வந்து, உன் வாயாலயே வந்தே மாதரம் என சொல்ல வைக்கலை, நாங்க ராணுவம் கிடையாது' என, பேசி முடித்து இருந்தேன். அந்த பதிவின் வாயிலாக வெளியிட்ட கருத்துகள், வேகமாக ஏராளமானோருக்கு சென்று சேர, பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு, என் தைரியத்தையும் பாராட்டி இருந்தனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு என் மீது ஆத்திரம் ஏற்பட்டது. என் மொபைல் போன் எண்ணை எப்படியோ பெற்று, தொடர்ந்து மிகக் கடுமையாக பேசினர்.

குறிப்பாக, கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் என கூறிக் கொண்டு என்னை அழைத்த மணிமாறன் என்பவர், கடுமையான வார்த்தைகள் மற்றும் கொச்சையான வார்தைகளில் பேசினார். 'எங்கள் தலைவர் கருத்தை விமர்சித்து பேசுவதோடு, எங்கள் தலைவரையும் விமர்சித்து பேசும் உன்னை, நீ இருக்கும் இடத்துக்கு வந்தே வெட்டி கொலை செய்வோம். தேவையானால், 'பாம்' போட்டுக் கொல்வோம்' என, மிரட்டினார்.
மேலும், 'நீ வெளி மாநிலத்தில் இருக்கிறாய் என்பதால் தைரியமாக பேசுகிறாய். உன் குடும்பம் தமிழகத்தில் தானே இருக்கிறது. உன் குடும்பம் என்ன ஆகுதுன்னு பார்' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அவருக்கு சரியான பதிலடி கொடுத்து பேசினேன். கவுரவமான ராணுவ வீரராக, சிரித்தபடியே அவரது பேச்சை எதிர்கொண்டேன். அந்த உரையாடல் பதிவையும் முகநுாலில் பதிவிட்டேன். உடனே, விவகாரம் பற்றிக் கொண்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
'பா.ஜ., என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும். தமிழகத்தில் இருக்கும் உங்கள் குடும்பத்தினரை பா.ஜ., தலைவர்களை அனுப்பி பார்த்து வர சொல்கிறேன். உங்கள் குடும்பத்துக்கு பா.ஜ.,வினர் பாதுகாப்பாக இருப்பர்' என, வாக்குறுதி அளித்தார்.
பாதுகாப்பு
இந்த விஷயத்தில் பா.ஜ., களமிறங்கியது என தெரிந்ததும், மாவட்ட காவல் துறையினர், என் வீட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பேசி உள்ளனர். சி.ஆர்.பி.எப்., டில்லி தலைமையகத்தில் இருந்து இயக்குனர் ஜெனரல் என்னிடம், 'எதற்கும், யாருக்கும் அஞ்ச வேண்டாம்' என, கூறினார். தேசப்பற்றுடன் இருக்கும் இந்த குருமூர்த்தி முன், ஆயிரம் திருமாவளவன்கள், மணிமாறன்கள் வந்தாலும், அதை தீரத்துடன் எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --