தி.மு.க., சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக் கூட்டம், திருநெல்வேலியில் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, கவர்னர் ரவி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரை, 'மென்டல்' என, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து, பா.ஜ., மாநில செயலரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கூறியதாவது: கவர்னரை அவதுாறாக பேசி, அவர் பணி செய்யாமல் தடுப்பதை, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் கடும் குற்றமாக சொல்கிறது. எனவே, அந்த சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், வழக்கு தொடுக்கப்படும். பா.ஜ.,வின் அசுர வளர்ச்சியை கண்டு அச்சத்தில், தி.மு.க., தலைவர்கள் இப்படி பேச துவங்கியுள்ளனர். பழையபடி வன்முறையை கையில் எடுக்கின்றனர் என்பதற்கு, அக்கட்சி தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களே உதாரணம்.

விமர்சனம் செய்வதில் நாகரிகம் இருக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள், இனியும் நாக்கை அடக்காமல் தாறுமாறாக பேசினால், எப்படி அடக்குவது என, எங்களுக்கு தெரியும். தாளமுத்து நடராஜனைப் போன்ற தொண்டர்களை தீக்குளிக்க வைத்து, உயிரை பறித்து, அதன் வாயிலாக கட்சியை வளர்த்து, பணத்தை கொள்ளைஅடித்து குடும்பம் வளர்க்கும் கட்சியல்ல பா.ஜ.,
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதற்காக, தன் இன்னுயிரை நீத்தவர் பா.ஜ., முன்னோடியான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் சொந்த அரசியல் தத்துவம், இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக, அன்னிய சித்தாந்தங்களுக்கு எதிராக போராடி, இந்திய மண்ணில் உயிரை தியாகம் செய்தவர், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா.
அப்படிப்பட்ட நெஞ்சுரம் மிக்க பா.ஜ., தொண்டர்களை சிறையில் அடைத்தால், பயந்து ஓடி விடுவர் என்று, ஒரு கோழை சொல்லக் கூடாது. இப்படி பூச்சாண்டி காட்டும் வேலையை எல்லாம், வேறு எங்காவது அவர் வைத்து கொள்ளட்டும். தமிழக பா.ஜ.,விடம், இனி அவரது பயமுறுத்தல் எடுபடாது. மொத்தத்தில் அடுத்தவரை பார்த்து 'மென்டல்' என்று சொல்லும் ஆர்.எஸ்.பாரதி, முழு மென்டலாகி விட்டார். அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -