சென்னை:இலங்கை கடற்படை கைது செய்து விடுவித்த, தமிழக மீனவர்கள் 15 பேர், நேற்று சென்னை வந்தடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 15 மீனவர்கள், இம்மாதம் 5ம் தேதி, கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து, மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்எழுதியது. மீனவர்கள் 15 பேரையும், இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது.
அவர்கள், ஏர் இந்தியா விமானம் வாயிலாக, நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாஸ்போர்ட் இல்லாததால், அவசரச் சான்றிதழ் வாயிலாக, அனைவரும் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். தமிழக பா.ஜ., துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில், அதன் நிர்வாகிகள் விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்றனர்.