சென்னை:நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை அளிக்கவும், தேவையின்றி வாய்தா வழங்கக் கூடாது எனவும், சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், 2018ல் ஓய்வு பெற்றார். இவருக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 2003ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
துரதிருஷ்டவசமானது
கடந்த, 19 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும், இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இதையடுத்து, ஓய்வூதிய பலன்கள் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அண்ணாதுரை, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
கடந்த, 1983 முதல் பதிவான ஊழல் வழக்குகளில், 1,635 வழக்குகள் நிலுவையில்உள்ளன.
குறிப்பிட்ட அவகாசத்துக்குள் ஊழல் வழக்குகளை அதிகாரிகள் முடிக்காதது,துரதிருஷ்டவசமானது.
ஊழல் வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தால், அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயலாது.
வழக்கு விசாரணை துவங்கி விட்டால், நீண்ட நாட்களுக்கு தள்ளி வைக்காமல், விசாரணையை தொடர்ந்து நடத்தி விரைவில் முடிக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பதால், விசாரணை நடவடிக்கைகள் நீர்த்து விடும்.
எனவே, ஊழல் வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களும், 'ரெகுலர்' நீதிமன்றங்களும் முன்னுரிமை அடிப்படையில் அணுக வேண்டும்.
கடந்த, 2011 முதல் 2021 வரை மட்டும், 1,153 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணை இப்படி போக அனுமதித்தால், உருப்படியான பலன் கிடைக்காது.
தகுதியான சலுகைகள்
அதனால், நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான காரணங்களுக்கு மட்டும், வாய்தா வழங்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, நான்கு வாரங்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கான உத்தரவை, போக்குவரத்து கழக நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.
விதிகளின்படி, தகுதியான சலுகைகளை, மனுதாரருக்கு வழங்க வேண்டும். மீதி பலன்களை, கிரிமினல் வழக்கு முடிந்த பின், தீர்ப்பை பொறுத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.