சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஏழு மாதங்களாக இழுத்தடித்ததால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராதேவி, பணத்துடன் வந்தார்.
சிவகாசி மாநகராட்சி கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திராதேவி,'' புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் விண்ணப்பித்த 11 பேருக்கு 7 மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குப் பின் விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளனர். எனவே எனது வார்டில் உள்ள மனு கொடுத்த 11 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு வந்துள்ளேன். இந்த லஞ்ச பணத்தை வாங்கி கொண்டு அதிகாரிகள் அனைவரும் பங்கு போட்டு, அனுமதி வழங்க வேண்டும், என்றார்.
அதிர்ச்சியடைந்த மேயர் சங்கீதா, மனுக்கள் மீது அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தி.மு.க., கவுன்சிலரே பணத்துடன், மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.