மதுரை:சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த இன்ஜி., பட்டதாரி கோகுல்ராஜ், 2015ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை சிறப்பு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை முடிவடைந்து , யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சிலர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ் சாட்சியாக மாறிய இளம்பெண் சுவாதியை(கோகுல்ராஜ் உடன் படித்தவர்) நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 25ம் தேதி போலீசார் சுவாதியை ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளில் இருப்பது தான் இல்லை என்றும் ஒலி நாடாவில் இருந்த குரல் தன்னுடையது அல்ல எனவும் சுவாதி கூறினார். விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், சுவாதி நேரில் ஆஜராக வேண்டும். அப்போதும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு எழுப்பிய கேள்விக்கு, கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சுவாதி பதிலளித்தார். இதனையடுத்து தவறான தகவல் அளித்ததாக கூறி சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.