வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருமண பிரச்னைகள் மற்றும் ஜாமின் வழக்குகளை விசாரிக்க மீண்டும் பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் அமைத்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படுவது 3வது முறையாகும்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதி பதவிகள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதியை சேர்த்து 27 நீதிபதிகள் உள்ளனர். அதில் 3 பேர் பெண் நீதிபதிகள். கோஹ்லி, பிவி நாகரத்தினா மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் பெண் நீதிபதிகள். அதில் நாகரத்தினா வரும் 2027 ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியேற்றால், முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெயர் அவருக்கு கிடைக்கும்.
முதலாவதாக, 2013 ம் ஆண்டில் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட பெண் நீதிபதிகள் அமர்வு உள்ளது.பிறகு 2018 ம் ஆண்டில் பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பெண் நீதிபதி கோஹ்லி மற்றும் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் அமைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அறை எண் 11ல் பணியாற்றும் இவர்கள், வேறு நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகள், திருமண பிரச்னைகள் மற்றும் ஜாமின் விவகாரங்கள் ஆகிய மனுக்களை விசாரிப்பார்கள்.