புதுடில்லி,:புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயரை, அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கைதாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
வழக்குப் பதிவு
இந்த விவகாரத்தில் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்களிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிஉள்ளனர்.
சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், மதுபான விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவருமான அமித் அரோரா, ஆம் ஆத்மி முக்கிய பிரமுகரும், சிசோடியாவுக்கு நெருக்கமானவருமான விஜய் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அமித் அரோரா கைது தொடர்பாக, புதுடில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராகவும் உள்ளார்.
அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மதுபானக் கொள்கை தொடர்பாக அமித் அரோரா, கடந்த ஓராண்டில் 35 பேரை தொடர்பு கொண்டுள்ளார்; இதில் கவிதாவும் அடக்கம். அவர் கவிதாவை 10 முறை தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.
100 கோடி ரூபாய்
இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கத் துவங்கியதும், கவிதா இரண்டு 'சிம் கார்டு'களை பயன்படுத்தியுள்ளார். ஆறு முறை மொபைல் போன்களை மாற்றியுள்ளார். அந்த மொபைல் போனில் பதிவான டிஜிட்டல் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
புதிய மதுபானக் கொள்கை தொடர்பாக, 'சவுத் குரூப்' என்றழைக்கப்படும் நிறுவனத்தைச் சேர்ந்த நபர்களிடம் விஜய் நாயர், 100 கோடி ரூபாய் பெற்று, அவற்றை ஆம் ஆத்மி பிரமுகர்களுக்கு கொடுத்துள்ளார்.
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதால், மொத்த விற்பனையாளர்களுக்கு கிடைத்த லாபத்தில் குறிப்பிட்ட சதவீதமாக, இந்த 100 கோடி ரூபாய், ஆம் ஆத்மி ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சவுத் குரூப்பில் கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி., ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவா மற்றும் சரத் ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவல்களை அமித் அரோரா, தன் வாக்கு மூலத்திலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணம் குவிப்பதற்காக, ஆம் ஆத்மி கட்சியினர், புதுடில்லி மாநில அரசின் கருவூலத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர். புதிய மதுபானக் கொள்கை, அதிக லாபம் வைத்து விற்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஒட்டுமொத்தமாக, 2,871 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. புதுடில்லி மாநில அரசுக்கு, 581 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயப்பட மாட்டேன்
இதையடுத்து கவிதா, அமலாக்கத் துறையால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவுவதால், தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவிதா கூறியதாவது:
தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு, பிரதமர் மோடி வருவதற்கு முன்பே அமலாக்கத் துறை வந்து விடும் என்பது, எல்லாருக்கும் தெரிந்தது தான். எந்தவிதமான விசாரணைக்கும் தயார். அமலாக்கத் துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன்.
நானும், எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும், மத்திய விசாரணை அமைப்பின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளோம். மிஞ்சிப் போனால் எங்களை சிறையில் தான் அடைக்க முடியும்; துாக்கில் போட முடியுமா? இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்! இவ்வாறு அவர் கூறினார்.