'அரசியல் சாசன விதிகள் 25, 26ன் படியும் சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்பின் படியும் கோவில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் 2014 ஜன., 6ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் இரண்டு விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒன்று, சிதம்பரம் பொது தீட்சிதர்கள், 'சீர்மரபினர்' என்பதை, சென்னை உயர் நீதிமன்றம், 1951ல் உறுதி செய்தது. அதை மீண்டும் பரிசீலனை செய்வதற்கு இடமே இல்லை.
தில்லை நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பல நுாற்றாண்டுகளாக நிர்வாகம் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள் முழு உரிமை படைத்தவர்கள் என்பதாகும். மற்றொன்று, ஒரு கோவில் நிர்வாகத்தில் சீர்கேடு இருந்தால் மட்டுமே அறநிலையத் துறை அதன் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் நிர்வாகத் தவறுகளை சரி செய்து விட்டு உடனடியாக கோவிலை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கோவில் நிர்வாகத்தை தொடர்ந்து அறநிலையத் துறையால் மேற்கொள்ள முடியாது.
![]()
|
அறநிலையத் துறைச் சட்டப் பிரிவு, 45ன் படி, ஒரு செயல் அலுவலரை நியமனம் செய்து, நியமன விதிகள் இயற்றப்படாமல் இருந்தால், அந்த நியமனம் செல்லாது. செயல் அலுவலர் நியமன உத்தரவில், நியமனத்திற்கான காரணமோ அல்லது நியமன காலமோ குறிப்பிடவில்லை என்றால் அந்த உத்தரவே செல்லாது; அது சட்ட விரோத உத்தரவு என கூறப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வைத்தீஸ்வரன் கோவில் வழக்கில், 1965ம் ஆண்டு ஒரு தீர்ப்பு அளித்துள்ளது.
அதில் 'துணை கமிஷனரோ, கமிஷனரோ, நீதிமன்றமோ தகுந்த காரணத்தை நிரூபிக்காமல் ஒரு செயல் அலுவலரை நியமனம் செய்ய முடியாது. அப்படியே செயல் அலுவலர் நியமனம் செய்தால் சிறிது காலத்திற்கு தான்' என்றும் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான், 2014ல் உச்ச நீதிமன்றம், சிதம்பரம் கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாட்டில் உச்ச நீதிமன்றம் சொல்லுகிற உத்தரவை மதித்து பின்பற்ற வேண்டும் என, அரசியல் சாசன ஷரத்து, 141ல் கூறப்பட்டுள்ளது.அந்த உத்தரவுகளை அரசும் கீழமை நீதிமன்றங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது விதி. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் 'அரசியல் சாசன விதிகள், 25, 26ன் படியும், சிதம்பரம் கோவில் தொடர்பான என் வழக்கின் தீர்ப்பின் படியும், தமிழக கோவில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும். அவ்வாறு செய்யவிட்டால், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாகும்' என்று கூறியுள்ளார்.
- நமது நிருபர் -