சென்னை: தமிழகத்தின் இன்று(டிச.2) முதல் டிச.,6 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் டிச.,5ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்து8 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிச., 8 ம் தேதி ஒட்டி வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(டிச.,2) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,
டிச., 4ல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை(டிச.,3) மற்றும் டிச., 6ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.,5ல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதிக்கு டிச.,4ம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிக்கு டிச.,05லும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு டிச.,06 லும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.