சென்னை: தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலை, கேரளாவிற்கு தாரைவார்க்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்வதாக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திராவிட மாடல் அரசு என்று தினம் தோறும் தமிழர்களை ஏமாற்றி, தமிழர்களை வஞ்சிக்கும் திமுக அரசு தற்போது சிலப்பதிகாரம் தந்த கண்ணகியின் மங்கலதேவி திருக்கோயிலை கேரள மாநிலத்திற்கு தாரைவார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நேரடியாகவே உதவி புரிகிறது.
கண்ணகி தேவி பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேரள மாநில தேவசம்போர்டிடமும், அதன் அமைச்சரிடமும், கேரள மாநில முதல்வரிடமும் சென்று கண்ணகி சிலையை நீங்கள் வைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு தமிழக அரசியல்வாதிகளில் ஒரு சிலர் உதவியதும் உண்மை. உடனே கேரள அரசு, -கண்ணகி கோயில் யாருடைய எல்லையில் இருக்கிறது என்பதை முறையாக ஆய்வு செய்யாமல், கோவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது, அடிமைத்தனத்தின் உச்சம்.
இந்த கண்ணகி கோயில் கட்டட தொல்லியல் துறை கோயில் கட்டுவதற்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்பது மற்றொரு உண்மை.

இந்நிலையில் தமிழகஇந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வெளியிட்ட அறிக்கை தமிழர்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
1.அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில் மேலூர் வட்டம் மதுரை மாவட்டம்.
2.மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் கெங்கஹள்ளி தாளவாடி வட்டம் ஈரோடு மாவட்டம்.
3. அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி சாப்டூர். பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம்.
4. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி.
5. அருள்மிகுசொரிமுத்து அய்யனார் திருக்கோயில் சிங்கம்பட்டி அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம்.
6.அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை.
7.அருள்மிகு மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் தேனி.( துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்.)
8.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மருதமலை கோவை மாவட்டம்.
9. அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி பேரூர் வட்டம் கோவை மாவட்டம்.
10. ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை மாமல்லபுரம்.

மேலே குறிப்பிட்ட பட்டியலில் உள்ள 10 கோயில்களில் ஒன்பது கோவில் அறநிலையத்துறை பட்டியலில் வருகிறது!
குறிப்பாக மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் துறை கட்டுப்பாட்டில் இல்லை என்று குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இதுதான் கேரள மாநிலத்திற்கு கண்ணகி திருக்கோயிலை தாரை வார்ப்பதற்காக திராவிட மாடல் அரசின் - இந்து சமய அறநிலைத்துறை நேரடியாக உதவி செய்கிறது தமிழர்களுக்கு துரோகம் செய்வது என்பது விளங்கும்.
கண்ணகி கோயிலை எதற்காக இந்து சமய அறநிலையத்துறை பட்டியலில் வைக்காமல் -இது துறை கட்டுப்பாட்டில் இல்லை என்று குறிப்பிட வேண்டும்? இந்து சமய அறநிலையத் துறை கொடுத்திருக்கும் இது போன்ற சுற்றறிக்கை கேரளாவிற்கு பழமை வாய்ந்த கண்ணகி கோயிலை கொண்டு போய் சேர்த்து விடும் என்பதை தமிழக அரசு உணராதது ஏன்?
இந்துசமயஅறநிலையத்துறை ஆணையரின் கூற்றுப்படி துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில் என்றால் எதற்காக அது குறித்து வனத்துறையுடன் விவாதிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ,
தேனி மாவட்ட உதவி ஆணையர் ஆகியோர் காணொளி கூட்டத்திற்கு ஏன் அழைக்கப்பட வேண்டும்?ஏன் சொல்ல வேண்டும்?

தமிழகத்திற்கும் ,இந்து சமய அறநிலையத்துறைக்கும் கண்ணகி திருக்கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்து கேரளாவிற்கு வாய்மொழி உத்தரவாக உறுதி பத்திரம் சொல்லிடவா?
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் இதனுடைய பின்னணி சதி என்ன என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், கண்ணகி திருக்கோயில் விசயத்தில் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்? மங்கலதேவி கண்ணகி கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் பட்டியலில் இருக்கிறதா? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
கண்ணகி திருக்கோயிலை காத்திடுவது ஒவ்வொரு இந்து தமிழர்களுடைய உரிமை நம்முடைய கடமை.கண்ணகி கோயிலை கேரள மாநிலத்திற்கு கொடுக்க நினைக்கும் பச்சை துரோகத்தை எதிர்த்து வீதி மன்றங்களிலும் நீதிமன்றங்களிலும் போராடுவதற்கு தமிழக மக்கள் தயாராக வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. கண்ணகியின் பேரருளால் திராவிட மாடல் அரசின் திருட்டு வேலைகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.