மதுரை : 'தாமிரபரணி ஆற்றின் பெயரை 'பொருநை நதி' என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு 12 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி பொன்காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டது.
திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரியபுராணம் என பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே உள்ளது.
![]()
|
பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். தாமிரபரணி என்பது வடமொழிச்சொல்; அதற்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமை செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அப்போது 'மனுதாரர் கோரிக்கை முக்கியமானது' என குறிப்பிட்ட நீதிபதிகள், 'தாமிரபரணி என்பதை பொருநை நதி என மாற்றுவது குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.