பெரம்பலுார்:தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு முக்கியத்துவம் தரப்படாமல், அவர் புறக்கணிப் பட்டு வருவதாக கட்சியின் உடன்பிறப்புகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. முன்னாள் மத்திய அமைச்சரான இவர், தற்போது, நீலகிரி எம்.பி.,யாகவும், தி.மு.க., துணைப் பொதுச் செயலராகவும் உள்ளார்.கட்சியில் தற்போது இவருக்கு போதிய முக்கியத்துவம் தரப்படாமல், புறக்கணிக்கும் வகையில் கட்சித் தலைமை நடந்து கொள்வதாக உடன்பிறப்புகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதை உறுதிபடுத்தும் வகையில், கடந்த 29ம் தேதி அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில், அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.இந்த விழாவில் சிதம்பரம் எம்.பி., திருமாவளவன் பேசி முடித்ததும், அடுத்ததாக தன்னை பேச அழைப்பர் என்று நினைத்த ராஜா, இருக்கையில் இருந்து எழ முயற்சித்தார்.
அப்போது, அமைச்சர் சிவசங்கர் பேச அழைக்கப்பட்டார். இதனால், முகம் சிவந்த ராஜா, வாடிய முகத்துடன் மேடையில் காணப்பட்டார்.அதை மேலும் உறுதிபடுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, அமைச்சர் சிவசங்கரின் செயல்பாடு குறித்து புகழ்ந்து பேசியதுடன், அமைச்சர் சிவசங்கருக்கு உறுதுணையாக ராஜா செயல்பட்டதாக கூறியதால், ராஜா இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி விமர்சனங்களுக்கு உள்ளாகி கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்துவதால், கட்சி தலைமை, அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்பெல்லாம் ஸ்டாலின் பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசினால், 'ராஜாவுக்கு உறுதுணையாக சிவசங்கர் செயல்படுகிறார்' எனக் கூறுவார்.தற்போது, அது தலைகீழாக மாறி சிவசங்கருக்கு உறுதுணையாக ராஜா செயல்படுகிறார் என கூறும் அளவிற்கு நிலை மாறிவிட்டது என்றனர், கட்சியினர்.