வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பாஜ., உயர் நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜ., உயர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(டிச.,05) துவங்கியது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறும்.

குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆமதாபாத்துக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று காலை வாக்களித்துவிட்டு அங்கிருந்து நேரடியாக டில்லி திரும்பினார். இதையடுத்து, பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை மாலை உரையாற்றுவார்.
ஆலோசனைகள்:
இந்தக் கூட்டத்தில் பாஜ., அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து இன்று ஆலோசிக்கபட்டது. கட்சியை வலுப்படுத்துவது, எந்த மாநிலங்களில் வலுவிழந்து காணப்படுகிறதோ அங்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜி20 உச்சி மாநாட்டின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜ., வின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜி20 மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்துவது, மக்களிடம் எவ்வாறு ஜி20 மாநாட்டை கொண்டு சென்று விழிப்புணர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.