குன்னூர் : வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி ஜெனரல் அனில் சவ்கான், இன்று ஹெலிகாப்டரில் வருகை தந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன். ராணுவ பயிற்சி கல்லூரியில் நம் நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் முப்படை உயர் அதிகாரிகள் வருகை தந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெறும் இடைநிலை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றி செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று, முப்படை தளபதி ஜெனரல் அனில் சவ்கான் இன்று வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த முப்படை தளபதி, கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து பயிற்சி பெறும் இடைநிலை முப்படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது, " தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் குறித்தும், ஆயுத படைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் பல்வேறு முயற்சிகள் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், கல்லூரியின் நினைவு சின்னத்தை முப்படை தளபதிக்கு, நினைவு பரிசாக வழங்கினார்.
மாறிவரும் சூழலில் கல்லூரியின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும், கல்லூரியின் பல்வேறு முயற்சிகள் குறித்தும் அதிகாரிகள் முப்படை தளபதிக்கு விளக்கம் அளித்தனர். கல்லூரியின் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட மேம்படுத்தல் குறித்து தெரிவிக்கப்பட்டது . தொடர்ந்து, மாலையில் குன்னூர் பகுதிகளில் மேகமூட்டம் நிலவியதால், ஹெலிகாப்டரில் செல்லாமல், முப்படை தளபதி கோத்தகிரி வழியாக காரில் சென்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, இதே போல கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர், குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
தற்போது வானிலையை முறையாக கண்காணித்து மேகமூட்டம் இல்லாத நேரத்தில் ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது.