சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை, 'நன்னாள்' எனக் குறிப்பிட்டு, பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.,வின் முன்னாள் பொது செயலருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அ.தி.மு.க., இடைக்கால பொது செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர், தனித்தனி கோஷ்டிகளாக, ஜெயலலிதா நினைவிடம் சென்று, அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஒவ்வொரு அணியினரும் உறுதிமொழி ஏற்றனர்.
![]()
|
இடைக்கால பொது செயலர் பழனிசாமி உறுதிமொழி வாசித்தார். அப்போது, 'நம் உதிரத்தில், நாடி, நரம்புகளில் கலந்திட்ட, ஜெயலலிதா மறைந்திட்ட 'இந்நன்னாளில்', தொண்டர்களின் படை பலம் ஆர்ப்பரிக்க, கடமை தவறாத உடன்பிறப்புகள், ஜெ., மறைந்திட்ட 'இந்நன்னாளில்' வீர சபதம் ஏற்போம்' என, உறுதிமொழி வாசித்தார்.
இதை கட்சி நிர்வாகிகளும், உரத்த குரலில் பின்தொடர்ந்து வாசித்தனர்.
இதேபோல், பன்னீர்செல்வம் அணியின் சார்பில், ஜே.சி.டி.பிரபாகர் உறுதிமொழியை வாசித்தார். 'மக்கள் நலத்திட்டங்களை எல்லாம், மீண்டும் தொடர்ந்திட, 'இந்நன்னாளில்' உறுதியேற்கிறோம்; 'நன்னாளில்' உறுதியேற்கிறோம்' என, வாசித்தார். பன்னீர்செல்வம் உட்பட அனைத்து நிர்வாகிகளும், அதை உரத்த குரலில் பின்தொடர்ந்தனர்.
இந்த உறுதிமொழியின் 'வீடியோ' காட்சிகள், நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
'கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா மறைந்த நாள் என்பது, கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்னாளா' என, தொண்டர்கள் கவலையுடன் பேசி வருகின்றனர்; எதிர்க்கட்சியினர், விமர்சித்தும் வருகின்றனர்.