வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, அதன் முன் ஆவணங்களை சரிபார்க்க, எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்க விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பதிவில், மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பதிவுத் துறை எடுத்து வருகிறது.
பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக, சொத்தின் தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் - பதிவாளர்கள் சரிபார்ப்பதுடன், அதன் குறிப்பிட்ட சில பக்கங்களை 'ஸ்கேன்' செய்து, புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.
இதில், சொத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, வழக்கமாக, 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
![]()
|
இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
சொத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, அதன் முன் ஆவண ஆய்வில் அசல் பத்திரங்கள் தேவை.
இதில், கடைசியாக பதிவான விற்பனை பத்திரமும், அதற்கு முந்தைய பத்திரமும் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
சில சொத்துக்களில், சமீப ஆண்டுகளில் எவ்வித விற்பனை பரிமாற்றமும் நடக்காத நிலையில், 30 ஆண்டு வில்லங்க சான்று போதுமானதாக இல்லை.
இதனால், 50 முதல் 60 ஆண்டுகளுக்கான வில்லங்க விபரங்களை திரட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில், தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பொதுமக்களுக்கும், பதிவாளர்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது.
பத்திரப்பதிவின் போது எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு, கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இது குறித்து, பதிவுத்துறை தலைவரிடம் முறையிடப்பட்டு உள்ளது. இதில், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.