சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை, தமிழக அரசு, நாளை(டிச.,7) வெளியிட திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு, அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, இந்தாண்டு பொங்கலுக்கு மளிகை உட்பட, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதில், வெல்லம் உள்ளிட்ட பல பொருட்கள் தரமற்று இருந்தன. பல லட்சம் பேருக்கு துணி பை கிடைக்கவில்லை.
எனவே, வரும் பொங்கலுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. கார்டுதாரர்களின் வங்கி கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்த அரசு திட்டமிட்டது.

ஆனால், 'வங்கியில் வழங்கினால், கிராமங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவர்; ரொக்கமாக கொடுத்தால் தான், அரசுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்' என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால், வங்கி கணக்கு இல்லாத கார்டுதாரர்களுக்கு, வங்கி கணக்கு துவக்கும் பணி மும்முரமாக நடந்தாலும், வரும் பொங்கலுக்கு மட்டும், ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன இடம்பெற உள்ளன என்ற குழப்பம், கார்டுதாரர்கள் மட்டுமின்றி, உணவு, கூட்டுறவு துறையில் உள்ள அதிகாரிகளிடமும் நிலவுகிறது. இதனால், அவர்கள்பொங்கல் பரிசுக்கான முன் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டாமல் உள்ளனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு, நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.