கோத்தகிரி: கோத்தகிரி கேசலாடா கிராமத்தில், தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில், நீடித்த நிலையான வேளாண்மை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பில், உலக மண்வள தினவிழா நடந்தது.
கோத்தகிரி தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் தலைமை வகித்தார். உதகை மண் ஆய்வு கூட தொழில்நுட்ப அலுவலர் லங்கேஷ், மண் மாதிரி சேகரிப்பு குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் ஜோதி குமார் மண் மாதிரி செயல்முறை விளக்கம் அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், மண்வளம் மற்றும் இயற்கை மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசாந்த் பிரதம மந்திரி கிஷன் சமான் நிதி திட்டத்தின் கீழ், நில ஆவணங்கள் புதுப்பித்தல் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, 30 விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டை வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஊர் தலைவர் துரை நன்றி கூறினார்.